பென்னாகரம், மார்ச் 11: பென்னாகரத்தில், காவல் துறை சார்பில் சட்டமன்றத் தேர்தல் சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில், சட்டமன்ற தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம், டிஎஸ்பி புஷ்பராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அவர் பேசியதாவது: தேர்தல் பிரசாரத்திற்கு கூடுதல் வாகனங்களை பயன்படுத்த உரிய அனுமதி பெற வேண்டும். வாக்களிக்கும் நாளுக்கு 48 மணி நேரம் முன்னதாக, பிரசாரத்தை முடிக்க வேண்டும். பிரசாரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் ஒவ்வொரு பத்து வாகனங்களாக பிரிக்கப்பட வேண்டும். இவற்றுக்கு இடையே 200 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். வெடி பொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதிக்கக்கூடாது.தேர்தல் தொடர்பான பயணத்திற்கு அரசு வாகனத்தை பயன்படுத்துவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது.
இருசக்கர வாகனங்களில் ஸ்டிக்கர், விளம்பர பதாகைகள் அனுமதி இல்லை. ஊர்வலம் தொடங்கும் நேரம் மற்றும் முடியும் நேரம், இடம் மற்றும் ஊர்வலங்கள் செல்லும் வழி போன்ற விவரங்களையும் முன்கூட்டியே முடிவு செய்து கொள்ள வேண்டும். நிகழ்ச்சிக்கு அமைப்பாளர்கள் போதுமான ஏற்பாடுகள் செய்து தர வசதியாக, உள்ளூர் காவல்துறை அதிகாரிகளுக்கு முன்கூட்டியே கடிதம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், பென்னாகரம் டிஎஸ்பி சௌந்தர்ராஜன் மற்றும் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், ஒகேனக்கல் இன்ஸ்பெக்டர் தண்டபாணி, லதா உட்பட ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.