கூடலூர், மார்ச் 11: கொரோ னா இரண்டாம் அலை பரவல் எதிரொலி காரணமாக தேனி மாவட்டத்தின் தமிழக-கேரள எல்லைகளான கம்பம்மெட்டு, குமுளி பகுதிகளில் நேற்று முதல் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு பரிசோதனை தொடங்கியது. கொரோனா பரவல் தொற்று இரண்டாம் முறையாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதை தடுக்கும் வகையில் கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி தவிர்த்து வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு இ.பாஸ் மற்றும் பரிசோதனை முக்கியம் என்று கடந்த சில தினங்களுக்குமுன் அரசு அறிவித்தது.அதன்பேரில் தேனி மாவட்டத்தில் உள்ள எல்லை பகுதிகளான குமுளியில் கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கம்பம்மெட்டு பகுதியில் க.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பிலும் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு உள்ளது. முகாம்களில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் கேரளாவில் இருந்து தமிழகம் வரும் பயணிகளை தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் உண்டா என பரிசோதனை செய்து வருகின்றனர். ஆனால் இ.பாஸ் அனுமதி இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இது குறித்து வருவாய் மற்றும் சுகாதாரத் துறையினர் கூறும்போது, தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேலான ஆண், பெண் தொழிலாளர்கள் கூலி வேலைகளுக்கு சென்று வருகின்றனர்.
அவர்களை பரிசோதனை செய்ய இதுவரை எவ்வித தகவலும் வரவில்லை, அவர்கள் வழக்கம்போல் வேலைகளுக்கு சென்று வரலாம் என்று தெரிவித்தனர்.