திருப்புத்தூர், மார்ச் 11: திருப்புத்தூர் தாலுகா அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 6ம் தேதி நடக்க உள்ளது. இதனையொட்டி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கான 492 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 533 விவி பேட் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டன. திருப்புத்தூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள அறையில் இந்த இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து நேற்று காலையில் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர் சிந்து, அந்த அறைக்கு சீல் வைத்தார். அப்போது, தேர்தல் துணை வட்டாட்சியர் கமலக்கண்ணன், வட்டாட்சியர் ஜெயந்தி, ஆகியோர் இநருந்தனர். இந்த அறையை சுற்றிலும் ஆயுதம் ஏந்திய போலீசார் 24 மணிநேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.