×

அரவக்குறிச்சி அருகே தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து சிறுவன் பலி

அரவக்குறிச்சி, மார்ச் 10: அரவக்குறிச்சியை அடுத்த பெரியமஞ்சு வெளி ஊராட்சி நெல்லி கோம்பையில்4 வயது சிறுவன் வீடு கட்டுவதற்காக அமைக்கப்பட்டிருந்த 6 அடி ஆழமுள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பலியானான்.அரவக்குறிச்சியை அடுத்த பெரியமஞ்சு வெளி ஊராட்சி நெல்லி கோம்பையைச் சேர்ந்த பாண்டியன் மகன் பிரதீப்(4). இந்நிலையில் பிரதீப் அப்பகுதியிலுள்ள சிறுவர்களுடன் சேர்ந்து தெருவில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது அருகில் வீடு கட்டுவதற்காக அமைக்கப்பட்டிருந்த 6 அடி ஆழமுள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டியில் சிறுவன் பிரதீப் தவறி விழுந்து மிதந்து கொண்டிருந்ததை பார்த்த பிச்சை முத்துவின் மகன் ஹரிஹரன் சத்தம் போட்டான். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் பிரதீப்பை மீட்டு ஈசநத்தம் ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு பிரதீப் சிகிச்சை பலனின்றி இறந்தான். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Aravakurichi ,
× RELATED பூக்களும், காய்களும் அதிகமாக பருத்தி...