×

புதுக்கோட்டையில் ஆட்டோ திருடி விற்க முயன்றவர் கைது

புதுக்கோட்டை, மார்ச் 10: புதுக்கோட்டையில் ஆட்டோவை திருடி விற்க முயன்ற மயிலாடுதுறையை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.புதுக்கோட்டை மச்சுவாடி 2ம் வீதியை சேர்ந்தவர் சங்கர் (28). சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் கடந்த 6ம் தேதி தனது ஆட்டோவை சாந்தநாதபுரம் 5ம் வீதியில் நிறுத்தி விட்டு கடைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை.இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் புதுக்கோட்டை நகர போலீசார் வழக்குப்பதிந்து தனிப்படை அமைத்து ஆட்டோவை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் நெய்வாசல்பட்டி அருகே சோதனையிட்டபோது அங்கு சந்தேகப்படும்படி ஆட்டோவுடன் நின்ற மயிலாடுதுறையை சேர்ந்த கார்த்திகேயன் (38) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் வைத்திருந்தது திருட்டு போன சங்கரின் ஆட்டோ என்பதும், அதை அவர் திருடி விற்பதற்காக ஓட்டி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோவை பறிமுதல் செய்ததுடன் கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர்.மேலும் இதுபோல் வேறு எங்கெல்லாம் திருட்டில் ஈடுபட்டார் என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Pudukkottai ,
× RELATED வேங்கைவயல் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு