×

கரூர் தாந்தோணிமலை குடியிருப்புகளில் விநியோகம் செய்த தண்ணீரில் புழுக்கள்

கரூர், மார்ச் 10: கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை பகுதியில் நேற்று காலை குடியிருப்புகளுக்கு விநியோகம் செய்யப்பட்ட குடிநீரில் புழுக்கள் மற்றும் மாசு கலந்து வந்ததால் மக்கள் அதிருப்தியடைந்தனர். கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியான தாந்தோணிமலை, சணப்பிரட்டி போன்ற பகுதிகளுக்கு கட்டளை காவிரி ஆற்றுப்பகுதியில் இருந்து நீரேற்று நிலையம் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று காலை தாந்தோணிமலை பகுதியில் உள்ள சில தெருக்களுக்கு குழாய் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் மாசு கலந்து நிறம் மாறி வந்த தண்ணீரில் புழுக்களும் நெளிய ஆரம்பித்தன. இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள், தண்ணீரை பிடித்து பயன்படுத்துவதை நிறுத்திவிட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்து அதிகாரிகளின் கவனத்துக்கும் பொதுமக்கள் கொண்டு சென்றனர். புழுக்கள் கலந்த தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டதால் பகுதியினர் நேற்று மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிவிட்டனர். மேலும், கட்டளை நீரேற்று நிலையத்துக்குட்பட்ட அனைத்து குடிநீர் தொட்டிகளையும் சுத்தம் செய்து, குளோரினேஷன் செய்து, திரும்பவும் சுத்தமான தண்ணீர் விட விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உத்தரவின்படி அதற்கான பணிகள் நேற்று நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...