×

உங்களோட Mindset என்னவிதமானது? கரூரை கைகழுவிட்டீங்க.!! பெரியபாளையத்தையுமா..? சினிமாக்காரர்களை தினமும் மீட் பண்ணி சிரிச்சு பேசுறீங்களே..

சென்னை: திருவள்ளூர் பெரியபாளையம் தொழிற்சாலையில் அமோனியா வாயு தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் குடும்பத்தினரை இதுவரை நேரில் சென்று முதல்வர் விஜய் சந்திக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வரின் இந்த போக்கிற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் நயினர் நாகேந்திரன், கரூரை கைகழுவி விட்டது போல, பெரியபாளையத்தையும் புறக்கணிக்கிறீர்களா என்று முதல்வருக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்த அறிக்கையில், திருவள்ளூர் பெரியபாளையம் தொழிற்சாலையில் அமோனியா வாயு தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்து தமிழகத்தையே சோகக்கடலில் ஆழ்த்தியுள்ள நிலையில், உயிரிழந்தோரின் குடும்பத்தாரை இதுவரை நேரில் சென்று சந்திக்காத உங்கள் ஆணவமும் அலட்சியமும் கடும் அதிர்ச்சியளிக்கிறது என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்து உள்ளார்.

சினிமாக்காரர்களை தினசரி சந்தித்து சிரித்து பேசி மகிழும் உங்களுக்கு, உங்கள் ஆட்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் சொல்ல நேரமில்லையா அல்லது மனமில்லையா? ஒருவேளை பாதிக்கப்பட்டவர்கள் பனையூருக்கு வந்தால் தான் உங்கள் ஆறுதல் வார்த்தைகள் கிடைக்குமோ? பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை விட்டெறிந்து விட்டால் நமது கடமை முடிந்து விட்டது என அவர்களை சந்திக்காமல் நீங்கள் ஓரம் கட்டுவது என்ன விதமான மனநிலை? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுமட்டுமா? சீரழிந்த சட்டம் ஒழுங்கு, கேள்விக்குறியாகியுள்ள பெண்களின் பாதுகாப்பு, பெருகிவரும் போதைப் பழக்கம், தவெகவினரின் அராஜகங்கள் என உங்கள் ஆட்சியில் நடக்கும் எந்த பிரச்சினையையும் நீங்கள் கண்டு கொள்வதில்லை என்பதற்கு, ஒரே நாளில் (23/06/2026) மட்டும் 10 பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ள கொடூரமே சாட்சி. இப்படி எதைப்பற்றியும் கவலைப்படாமல், அடுத்த “நீரோ” மன்னன் போல முதல்வர் பதவியில் அமர்ந்துள்ள உங்களின் உண்மை முகம் கொஞ்சம் கொஞ்சமாக வெளுக்கத் துவங்கிவிட்டது என்றும் நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார்.

 

Tags : Chennai ,Thiruvallur ,Periyapalayam ,Chief Minister ,Vijay ,BJP ,
× RELATED அப்பா எங்கனு தேடாதீங்க.! கோட்டையில...