×

இலங்கைத் தமிழர்களுக்கான இந்தியக் குடியுரிமையை வலியுறுத்தும் ஆவணப்படத்தை இயக்கிய ராதாகிருஷ்ணனுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை: இலங்கைத் தமிழரின் வாழ்க்கை குறித்து FacelessPeople எனும் ஆவணப்படத்தை இயக்கிய ராதாகிருஷ்ணனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; “இலங்கைத் தமிழர்களின் துயர் குறித்து 20 ஆண்டுகளுக்கும் மேல் பத்திரிகையுலகில் எழுதிவந்த அன்புக்குரிய ராதாகிருஷ்ணன் ஆர்.கே., 30 ஆண்டுகளுக்கும் மேலாக மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழரின் வாழ்க்கை குறித்து FacelessPeople எனும் ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். அதனைப் பார்த்தேன்; நெகிழ்ந்தேன்!

இலங்கைத் தமிழர்களுக்கான இந்தியக் குடியுரிமையைத் தெளிவாக வலியுறுத்தும் இந்த ஆவணப்படத்தை உணர்வுடனும், பொறுப்புடனும் இயக்கிய ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டுகள்! வாழ்த்துகள்!

திராவிடமாடல் ஆட்சியில், முகாம் வாழ் தமிழர்கள் நலன் காக்க:

* மறுவாழ்வு முகாம் எனப் பெயர் மாற்றம்

* 7 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய வீடுகள்,

* மாதாந்திர பணக்கொடை, துணிமணிகள், பாத்திரங்கள்,

* கல்வி உதவித்தொகை, வேலைவாய்ப்பு முகாம், திறன் மேம்பாட்டுப் பயிற்சி உள்ளிட்ட வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தினோம்.

அதுமட்டுமின்றி, அவர்களது வாழ்வுரிமைக்கான நீண்டகாலத் தீர்வு குறித்து நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கான இந்தியக் குடியுரிமை குறித்த சட்டப்பூர்வ உரிமைகளை வலியுறுத்தி தி.மு.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த போது, மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்குவது தொடர்பாக 11-01-2026 அன்று பிரதமருக்குக் கடிதம் எழுதி வலியுறுத்தினேன்.

தி.மு.க. ஆட்சியில் சட்ட உதவிகள் மூலம் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்கள் 10 பேர் நீதிமன்றத் தீர்ப்பினைப் பெற்று, இந்திய குடிமக்களானதுடன், கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்து தங்கள் ஜனநாயகக் கடமையையும் நிறைவேற்றியுள்ளனர். குடியுரிமை பெறத் தகுதி உள்ள ஏறத்தாழ 25 ஆயிரம் இலங்கைத் தமிழர்களுக்காகத் தி.மு.க எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்புவார்கள்.

தற்போதைய அரசும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்காகத் திராவிட மாடல் அரசு மேற்கொண்ட திட்டங்களைத் தொய்வின்றித் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Tags : Radhakrishnan ,K. ,STALIN ,Chennai ,K. Stalin ,M. K. Stalin ,
× RELATED பெரியபாளையம் அருகே இறால்...