தஞ்சை: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பகுதியில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்து உள்ளன. விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் பல மாதங்களாக அரவைக்காக அனுப்பப்படாமல் குறிப்பிட்ட நெல் சேமிப்பு கிடங்கிலேயே தேக்கி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. தார் பாய்கள் கிழிந்ததாலும், நெல் மூட்டைகளை பாதுகாக்க போதிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்படாததாலும் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழை மற்றும் கடும் வெயிலால் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில் சமீபத்தில் திடீரென பெய்த கனமழை காரணமாக சேமிப்புக்கிடங்கு முழுவதும் மழைநீர் சூழ்ந்தது. இதனால் ஏற்கனவே சேதமடைந்திருந்த நெல் மூட்டைகளுடன், மேலும் பல மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி உள்ளன. மொத்தமாக வீணாகி இருக்கும் நெல் மூட்டைகளின் எண்ணிக்கை தோராயமாக 1 லட்சம் இருக்கும். எனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
தங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை உடனுக்குடன் அரவை ஆலைகளுக்கு அனுப்பாமல், பல மாதங்களாக ஒரே இடத்தில் அலட்சியமாகத் தேக்கி வைத்ததே இந்த பெருமளவு இழப்பிற்குக் காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர். மழையில் நனைந்த நெல் மூட்டைகளை உடனடியாக உலர வைக்கவோ அல்லது நவீன உலர் கலன்களுக்கு மாற்றவோ தவறினால், நெல் மணிகள் அனைத்தும் முளைக்கத் தொடங்கி முற்றிலும் வீணாகிவிடும் எனவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
