திருப்புத்தூர், மார்ச் 9: திருப்புத்தூர் அருகே மணமேல்பட்டி விலக்கு பகுதியில் நேற்று உரிய ஆதாரம் இல்லாததால் எடுத்துச் செல்லப்பட்ட மூன்று மூட்டை ரேஷன் அரிசிகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருப்புத்தூர்- குன்றக்குடி சாலையில் மணமேல்பட்டி விலக்கு பகுதியில் நேற்று பறக்கும் படை தாசில்தார் ஜெயலட்சுமி தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மணமேல்பட்டியைச் சேர்ந்த அடைக்கன் மகன் சதாசிவம் டூவீலரில் மூன்று மூட்டையில் 150 கிலோ ரேஷன் அரிசியை எடுத்துச் சென்றுள்ளார். அவரை நிறுத்தி விசாரித்த அதிகாரிகள் அவரிடம் உரிய ஆதாரம் இல்லாததால், அரிசி மூட்டையை பறிமுதல் செய்தனர். பின்னர் அரிசி மூட்டையை திருப்புத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் சுந்தரேஸ்வரியிடம் ஒப்படைத்தனர். அவர் அரசு குடோனில் ஒப்படைத்தார்.