×

திருமீயச்சூர் லலிதா திரிபுரசுந்தரிக்கு படைக்கப்படும் பிரண்டை சாதப் பிரசாதம்

பிரண்டை சாதத்தை, தாமரை இலையில் சுவாமிக்கு அர்ப்பணம் செய்து, அன்னதானம் செய்தால் நீண்ட ஆயுளும், சகல நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. எமதர்மராஜனின் மூலிகையே வஜ்ரவல்லி எனும் பிரண்டை. எமதர்மராஜனே இத்தலத்தில் தன் ஆயுள் விருத்திக்காக பிரண்டை சாதத்தை நிவேதித்து பேறு பெற்றான்.

பிரண்டை சாதத்திற்கு தேவையானவை:

அரிசி – 4 ஆழாக்கு.
இளம் தண்டுப் பிரண்டை: 1 கட்டு
உளுத்தம் பருப்பு: ஒரு சிறு கரண்டி அளவு.
குடம் புளி/ நாட்டுப் புளி: 1 நெல்லிக்காய் அளவு
சிவப்பு நீட்டு மிளகாய் வத்தல்: 10/ 12
இஞ்சி: 1 துண்டு
பெருங்காயத் தூள்: 1 சிட்டிகை
கல் உப்பு: தேவையான அளவு
செக்கு நல்லெண்ணெய்: 3 டேபிள் ஸ்பூன்
கடுகு உளுத்தம் பருப்பு: தாளிக்க.

செய்முறை:

முதலில் சாதத்தை பொலபொலவென வடித்து ஒரு தாம்பாளத்தில் கொட்டி ஆற வைக்கிறார்கள். பிரண்டையை கணு நீக்கி தோல் சீவி, நாரை உறித்து சுத்தமாக்கி சிறு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்கிறார்கள். பிறகு வாணலியை சூடாக்கி 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, எண்ணெய் சூடானதும் முதலில் 1 டேபிள் ஸ்பூன் உளுந்தம் பருப்பு, 1 துண்டு இஞ்சி சேர்த்து, இஞ்சி வதங்கியதும் அதனுடன் 10 அல்லது 12 நீட்டு மிளகாய் வத்தலைப் போட்டு வறுத்துக் கொள்கிறார்கள்.

பின்னர் தேவையான அளவு கல் உப்பு சேர்த்து கிளறி விட்டு இறக்கவும். கலவை சற்று ஆறிய பின் அவற்றை மிக்ஸியில் இட்டு நீர் சேர்க்காமல் அரைக்கிறார்கள். கடைசியாக வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு உளுந்து தாளித்து, அரைத்து வைத்த துவையலில் கொட்டி. எண்ணெய் சூடு இறங்கியதும் ஆறிய சாதத்தில் கொட்டி கலக்க வேண்டும்.

உச்சிக்கால பூஜையில் நீலநிற சங்கு புஷ்பங்களால் ஈசனை அர்ச்சித்து பிரண்டை சாதத்தை நிவேதிக்கின்றனர். எப்படிச் செல்வது? மயிலாடுதுறை – திருவாரூர் மார்க்கத்தில், மயிலாடுதுறையிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள பேரளம் என்ற ஊரில் இருந்து மேற்கே 2 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. மயிலாடுதுறை – திருவாரூர் ரயில் மார்க்கத்தில் உள்ள பேரளம் ரயில் நிலயத்தில் இருந்து கோவில் 1 கி.மீ. தொலைவில் உள்ளது.

Tags : Brandai Sadab Prasad ,Thirumeyachur ,Lalitha Tripurasundari ,Brandai ,Swami ,Emadarmarajan ,Emdarmarajane ,Brandai Sadat ,
× RELATED கனவை நிஜமாக்கும் நெடுங்குடி கைலாசநாதர்!!