×

நெட்டப்பாக்கம் காவல்நிலையத்தில் எஸ்ஐ, போலீஸ் பணியிடம் நிரப்பப்படுமா?

நெட்டப்பாக்கம், மார்ச் 8: நெட்டப்பாக்கம் காவல் நிலைய வட்டாரத்தின் கீழ் மடுகரை புறக்காவல் நிலையம், நெட்டப்பாக்கம், திருபுவனை ஆகிய காவல் நிலையங்கள் உள்ளன. தற்போது இந்த காவல் நிலையங்களில் உதவி ஆய்வாளர், தலைமை காவலர், உதவி காவலர்கள் என காலி பணியிடங்கள் உள்ளதால், குறைந்த காவலர்களை வைத்துக்கொண்டு சமூக பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு காலதாமதம் ஏற்படுகிறது.  கடந்த ஆண்டு நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த விபல்குமார்  நவம்பர் 21ம் தேதி, காவல் நிலைய வளாகத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். சப்-இன்ஸ்பெக்டரின் தற்கொலைக்கு இன்ஸ்பெக்டர் கலைச்செல்வனின் டார்ச்சர்தான் காரணம் என புகார் எழுந்த நிலையில், அவர் ஆயுதபடைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக இருந்தது. 2 மாதத்துக்கு முன்னர் நெட்டப்பாக்கம் காவல் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட்டார். ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் நியமிக்கப்படவில்லை. இந்த பணியிடம் காலியாக உள்ள நிலையில் மடுகரை புறக்காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ், திருபுவனை சப்-இன்ஸ்பெக்டர் அஜய்குமார் ஆகியோர் கூடுதலாக இப்பணியை கவனித்து வந்தனர். மேலும் தலைமை காவலர்கள் மற்றும் உதவி காவலர்கள் பணிகளும் காலியாக உள்ளன. எனவே புதுவை அரசு உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்களை நியமித்து பொதுமக்களின் பாதுகாப்புக்கு வழிவகை செய்ய வேண்டும் என சமூக
ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Tags : SI ,Nettapakkam police station ,
× RELATED ‘பெங்களூரு குண்டு வெடிப்புக்கும் எஸ்.ஐ.வில்சன் கொலைக்கும் தொடர்பில்லை’