விருதுநகர், ஜூன் 15: பருத்தி சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை குறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: வெள்ளை தங்கம் என அழைக்கப்படும் பருத்தி பெரும்பான்மையான மண் வகைகளில் வளரக்கூடியது. தேர்வு செய்யப்பட்ட இனத்திற்கு போதுமான அளவு நன்கு முக்கிய தொழு உரம் இட்டு மூன்று அல்லது நான்கு முறை உழவு செய்ய வேண்டும். அடி உரமாக வேப்பம் புண்ணாக்கு, மெக்னீசியம் சல்பேட் மற்றும் நுண்ணூட்ட உரம் இடுவது மிக முக்கியம். இதில் உயரமான பார் அமைத்து அதில் சுமார் ஒரு இன்ச் ஆழத்தில் குழிக்கு இரண்டு விதைகள் வீதம் விதைப்பு செய்ய வேண்டும்.
மண்ணின் தன்மை, நீர்ப்பிடிப்பு திறன் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு வீரிய ஒட்டு ரகங்களுக்கு ஏற்ப பயிர் இடைவெளி விட வேண்டும். விதைப்பு செய்து மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் களைக்கொல்லி தெளிக்கலாம். விதைப்பிலிருந்து 25 முதல் 30 நாட்கள் கழித்து ஊடுருவி பாயும் களைக்கொல்லி பயன்படுத்தலாம். அதிக களைகள் வளர்வதை தடுக்கவும் மண்ணை வளப்படுத்தவும் பயிர்களுக்கு போதுமான அளவு தழைச்சத்து கிடைக்கவும் ஊடுபயிராக பயிறு வகை பயிர்களான உளுந்து, தட்டைப்பயிறு போன்ற பயிர்களை சாகுபடி செய்யலாம்.
உரிய தருணத்தில் குருத்துப் பகுதியை நீக்கிவிட்டு தகுந்த வளர்ச்சி ஊக்கியை பயன்படுத்தும் பொழுது அதிக பக்க கிளைகள் உருவாகும்.
இது விளைச்சலை மேம்படுத்தும் மேலும் பருத்தி பயிர் பராமரிப்புக்கு ஏற்றவாறு நன்கு விளைச்சல் தரக்கூடிய பயிராக திகழ்கிறது. பராமரிப்பு உடைய வயலில் ஏக்கருக்கு சுமார் 1000 கிலோ வரை மகசூல் பெற இயலும். மேலும் அதிகப்படியான பூச்சி மற்றும் நோய் தாக்குதல் பருத்திப் பயிரை தாக்குவதால், தொடர்ச்சியாக வயலை ஆய்வு செய்து பூச்சி மற்றும் நோயை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
