×

உள் ஒதுக்கீடு ஆணையை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு

அன்னூர், மார்ச் 8: கோவை மாவட்டம் அன்னூரில், கொங்கு செட்டியார் இன மக்களின் உள் ஒதுக்கீடு எதிர்த்து கண்டன கூட்டம் நேற்று கொங்கு செட்டியார் மகாலில் நேற்று மாலை நடைபெற்றது. இதில், அன்னூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 50 கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு பல ஆண்டுகளாக இருந்து வந்த 20 சதவீத ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு என்ற பெயரில் வெறும் 2.5 சதவிகிதத்தில் கொங்கு செட்டியார் இன மக்களை சேர்த்ததை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த உள் ஒதுக்கீடு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் கொங்கு இன மக்கள், கொங்கு செட்டியார் இன மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

எனவே அரசின் இந்த ஆணையை எதிர்க்கிறோம் சாதிவாரி கணக்கெடுப்பு எடுப்பதன் மூலமே இட ஒதுக்கீடு பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்பதால், ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து அதற்கு பிறகு இட ஒதுக்கீடு என்பதே சரியாக இருக்கும்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில் இருந்து, இன்னொரு பிரிவினருக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு கூடாது. தனியே அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதே மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு பாதிப்பு ஏற்படுத்தாது. அந்த சமூகத்தினருக்கும் பெரிதும் உதவியாக இருக்கும்.

எதிர்காலத்தில் கொங்கு செட்டியார் இன மக்களை 2.5 சதவீத ஒதுக்கீட்டில் இருந்து விலக்கு அளித்து, ஆணை வெளியிட வேண்டும். இல்லையெனில், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து போராட்டங்களை நடத்துவோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் அன்னூர், கணேசபுரம், குருக்கலியாம்பாளையம், அச்சம்பாளையம்  உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முடிவில், தமிழக அரசின் உள் ஒதுக்கீட்டை எதிர்த்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. முன்னதாக, திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்த பறக்கும் படையினர்,போலீசார் தடை விதித்தனர். இதையடுத்து, கொங்கு செட்டியார் சமூக மக்கள் போலீசாரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து அனுமதி வழங்கப்பட்டது.

Tags :
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்