புதுடெல்லி: நாட்டின் 10 மாநிலங்களில் காலியாக இருந்த ராஜ்யசபா இடங்களுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்ட 24 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற மேலவையான ராஜ்யசபாவில் காலியாக இருந்த இடங்களை நிரப்புவதற்காக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு பரிசீலனை முடிந்த நிலையில், பல மாநிலங்களில் போட்டி இல்லாத காரணத்தால் 24 வேட்பாளர்கள் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த வெற்றியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 19 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 5 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. அதேநேரம் ஜார்க்கண்ட் மாநிலத்தின் 2 இடங்களுக்கும், மிசோரம் மாநிலத்தின் ஒரு இடத்திற்கும் மட்டும் வரும் 18ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் ஊடகப்பிரிவு தலைவர் பவன் கெரா, மன்சூர் அலி கான் மற்றும் பாஜகவின் எம்.நாகராஜா ஆகியோர் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் 50 ஆண்டுகால நாடாளுமன்ற பயணம் முடிவுக்கு வருகிறது. தமிழகத்தில் அதிமுகவின் சி.வி.சண்முகம் ராஜினாமா செய்ததால் ஏற்பட்ட காலி இடத்திற்கு, ஆளும் தவெக கூட்டணியின் ஆதரவுடன் காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 3 பேரும், ஜனசேனா கட்சியை சேர்ந்த ஒருவரும் வெற்றி பெற்றனர்.
குஜராத் மாநிலத்தில் பாஜகவின் 4 வேட்பாளர்கள் எதிர்ப்பின்றி தேர்வாகினர். ராஜஸ்தானில் பாஜகவின் சதீஷ் பூனியா, அல்கா குர்ஜார் மற்றும் காங்கிரஸின் நீரஜ் டாங்கி ஆகியோர் வெற்றி பெற்றனர். மகாராஷ்டிரா இடைத்தேர்தலில் ராஜேந்திர ஜெயின் மற்றும் ஒடிசாவில் பாஜகவின் தேவாஷிஷ் சமந்தராய் ஆகியோர் முறைப்படி தேர்வாகினர். வடகிழக்கு மாநிலங்களான மேகாலயாவில் முதல்வர் கான்ராட் சங்கமாவின் சகோதரர் ஜேம்ஸ் சங்கமாவும், மணிப்பூரில் பாஜகவின் சாரதா தேவியும் வெற்றி பெற்றனர். ஜார்க்கண்டில் ரிலையன்ஸ் நிறுவன இயக்குனர் பரிமல் நத்வானி பாஜக ஆதரவுடன் சுயேச்சையாக களம் இறங்கியுள்ளதால் அங்கு கடும் போட்டி நிலவுகிறது.
