ஈரோடு, மார்ச் 7: கோபி அடுத்துள்ள கரட்டுப்பாளையம், காரப்பாடி காலனியை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி விஜயலட்சுமி (26). இவர்களுக்கு ஹரிஷ் (4), சமரேஷ் (2) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 28ம் தேதி கணவர் குப்புசாமி, மனைவி, குழந்தைகள் அனைவரும் ஸ்கூட்டரில் சினிமா பார்ப்பதற்காக கோபி சென்றுள்ளனர். பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, காலேஜ் பிரிவு அருகே வரும் போது குழந்தைகள் குடிக்க தண்ணீர் பாட்டில் வாங்கி வருவதற்காக சாலையோரத்தில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு குப்புசாமி சாலையை கிராஸ் செய்து கடைக்கு சென்றுள்ளார்.
தண்ணீர் பாட்டில் வாங்கிக்கொண்டு திரும்பி வந்த போது, ஸ்கூட்டருடன் மனைவி குழந்தைகளும் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பல்வேறு இடங்களில் தேடியும் மனைவி, குழந்தைகள் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து கடத்தூர் போலீசில் குப்புசாமி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து காணாமல், போனவர்களை தேடி வருகின்றனர்.