×

தந்தையை அரிவாளால் வெட்டிக்கொன்ற மகன் கைது தேவதானப்பட்டி அருகே பரபரப்பு

தேவதானப்பட்டி, மார்ச் 7: தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டியில் தந்தையை அரிவாளால் வெட்டிக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி பஜனைமடம் தெருவைச் சேர்ந்தவர் அய்யாத்துரை(75). இவரது மனைவி அங்கம்மாள்(70). இவர் கடந்த 23 நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இவர்களுக்கு நான்கு மகன்கள் உள்ளனர். இதில் மூன்றாவது மகன் ஜெயக்குமார்(45) என்பவருக்கும், அவரது மனைவி  காயத்ரிக்கும் திருமணமாகி 18 வருடங்களாகிறது. இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 வருடங்களாக காயத்ரி  இரண்டு குழந்தைகளுடன் தனது தந்தை வீடான தேனி பொம்மையக்கவுண்டன்பட்டியில் வசித்து வருகிறார்.  

இந்நிலையில் நேற்று காலை உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் அய்யாத்துரை வீட்டில் இறந்து கிடந்தார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர்  தேவதானப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் இறந்த அய்யாத்துரையின் உடலை கைப்பற்றி, அவரது மகன் பூமிநாதன் புகாரின் பேரில் விசாரித்து வந்தனர்.  அய்யாத்துரையின் மூன்றாவது மகன் ஜெயக்குமாரை விசாரித்தில் தனது மனைவிக்கும், தந்தை அய்யாத்துரைக்கும் தவறான பழக்கம் என சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.  இதனால் எனது மனைவி என்னை விட்டு பிரிந்து வாழ்கிறார். இதனால் ஆத்திரத்தில் அரிவாளால் வெட்டிக் கொன்றேன் என வாக்குமூலம் அளித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. தேவதானப்பட்டி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்தனர்.

Tags : scythe ,
× RELATED முன்விரோதத்தில் அரிவாள் வெட்டு சென்னையில் வாலிபர் கைது