×

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் டெண்டர் தொடர்பான 18 ஹார்ட் டிஸ்க்குகள் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு

சென்னை: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் டெண்டர்கள் தொடர்பான 18 முக்கிய ஹார்ட் டிஸ்க்கள் திருடிய வழக்கு, சென்னை காவல்துறையில் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இந்த திருட்டு வழக்கில் பின்னணியில் மின்வாரிய அதிகாரிகள் பலர் சிக்கியுள்ளதால் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. தமிழக மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்மாற்றி ெடண்டர் மற்றும் நிலக்கரி டெண்டர் தொடர்பான ஆவணங்கள் சேகரித்து வைத்திருந்த ஹார்ட் டிஸ்க்குகள் திருட்டு வழக்கில் கணினி பராமரிப்பு பணிகளில் ஈடுபட்ட அரக்கோணத்தை சேர்ந்த ஒப்பந்த ஊழியர் கோபிநாத்(31), ஹார்ட் டிஸ்க்குகள் வாங்கிய முரளி மனோகர்(32) ஆகியோரை கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ஹார்ட் டிஸ்க்குகளில் உள்ள விவரங்கள் முழுமையாக எடுக்கப்பட்டு மீண்டும் அந்த ஹார்ட் டிஸ்க்குகள் புதிது போல் நவீன சாப்வேர் மூலம் பார்வர்டு செய்யப்பட்டிருந்தது தற்போது தெரியவந்துள்ளது. இதனால் டெண்டர்கள் மற்றும் நிலக்கரி தொடர்பான ஹார்ட் டிஸ்க்குகள் தொடர்பான விவரங்கள் எதுவும் இல்லாததால் இதன் பின்னணியில் உள்ள நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

திருடுபோனது 18 ஹார்ட் டிஸ்க்குகள் தான். ஆனால் பறிமுதல் செய்தது 34 என்பதால் பல மர்மங்கள் இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் உதவி செயற்பொறியாளர் மலர் விழி அளித்த புகாரில் கூறிய டெண்டர்கள் தொடர்பான 18 ஹார்ட் டிஸ்க்குகள், பறிமுதல் செய்த 34 ஹார்ட் டிஸ்க்குகளில் இல்லை என கூறப்படுகிறது. இதையடுத்து திருடப்பட்ட டெண்டர் தொடர்பான ஹார்ட் டிஸ்க்குகள் குறித்து முழுமையாகவும், முதலில் இருந்து விசாரணை நடத்தும் வகையில் காவல்துறை டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் சென்னை மாநகர காவல்துறையில் விசாரணையில் இருந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

இதைதொடர்ந்து சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விபரங்கள், கைது செய்யப்பட்ட 2 பேர் அளித்த வாக்குமூலங்கள் அனைத்து கோப்புகளும் சிபிஐடியிடம் ஒப்படைக்கின்றனர். பின்னர் சிபிசிஐடி மின்வாரிய ஹார்ட் டிஸ்க்கள் திருட்டு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மின்வாரிய ஒப்பந்த ஊழியரான கோபிநாத் மற்றும் ஹார்ட் டிஸ்க்கள் வாங்கியதாக கைது செய்ப்பட்டுள்ள முரளி மனோகர் ஆகியோர் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். மின்வாரிய அலுவலகத்தில் திருடப்பட்ட டெண்டர் தொடர்பான ஹார்ட் டிஸ்க் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட சம்பவம் மின்வாரியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Electricity Board ,CBCID ,DGP ,Mahesh Kumar Agarwal ,Chennai ,Chennai Police ,
× RELATED ஆந்திர கடல் எல்லையில் தமிழக மீனவர்கள்...