கரூர், மார்ச் 6: கரூர் வாங்கல் சாலையில் பஞ்சமாதேவி அருகே கட்டப்பட்டு வரும் வடிகால் பாலப்பணி மந்தகதியில் நடைபெறுவதால் வாகனஓட்டிகள் அவதியுற்று வருகின்றனர். இதனை விரைந்து முடிக்க வேண்டும் என வாகனஓட்டிகள் மற்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம் வாங்கல் சாலையில் பஞ்சமாதேவி செல்லும் பகுதியில் சில வாரங்களாக வடிகால் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலையின் வழியாக கரூரில் இருந்து வாங்கல், அரசு காலனி, பஞ்சமாதேவி, நெரூர், சோமூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும், நூற்றுக்கணக்கான இரண்டு சக்கர வாகனங்களும் சென்று வருகின்றன.
இந்த பாலம் கட்டும் பணி தாமதம் காரணமாக பெரும்பாலான வாகனங்கள் வாங்கப்பாளையம், வெங்கமேடு வழியாக சென்று வருகின்றன. எனவே, அனைத்து தரப்பினர்களின் நலன் கருதி இந்த பாலப்பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.