×

ஆந்திர மாநில எல்லையோர சோதனைச்சாவடிகளில் தேர்தல் அலுவலர் ஆய்வு

கிருஷ்ணகிரி, மார்ச் 6:கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆந்திர மாநில எல்லையான குருவிநாயனப்பள்ளி, வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரியனப்பள்ளி சோதனைச்சாவடிகளில் நேற்று மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திரபானு ரெட்டி ஆய்வு செய்தார். அப்போது மது கடத்தல் மற்றும் வாகன தணிக்கை பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியது: கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையையொட்டி, ஆந்திரா, கர்நாடக மாநில எல்லையோரங்களில் 11 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. வேப்பனஹள்ளி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட ஆந்திர மாநில எல்லையொட்டி அந்திகுண்டாவெளி, கர்நாடக எல்லையையொட்டி நேரலகிரி, ஓசூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட மத்திகிரி, கொத்தகொண்டப்பள்ளி, டி.வி.எஸ். பூனப்பள்ளி, கர்னூர், பாகலூர், கக்கனூரில் வாகன தணிக்கை நடக்கிறது.அதேபோல், பர்கூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட ஆந்திர மாநில எல்லையான வரமலகுண்டா, குருவிநாயனப்பள்ளி, தளி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட கர்நாடக மாநில எல்லையான கும்ளாபுரம் மற்றும் கெம்பட்டி ஆகிய இடங்களில்  அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளில், வாகனங்கள் முழுமையாக கண்காணிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது கிருஷ்ணகிரி சட்டப்பேரவை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags : Andhra Pradesh ,
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி