×

உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை நாகர்கோவில் வருகை

நாகர்கோவில், மார்ச் 6: உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை நாகர்கோவில் வருகிறார். கன்னியாகுமரியில் 6 சட்டமன்ற தொகுதிகளுடன், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.  அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி  கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடும் என்று தெரிகிறது. இந்த நிலையில் தேர்தல் குறித்து ஆலோசனை வழங்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை (7ம்தேதி) குமரி மாவட்டம் வருகிறார். அன்று காலை 9.30 மணிக்கு ஹெலிகாப்டரில் மறவன்குடியிருப்பு ஆயுதபடை மைதானத்தில் வந்திறங்கும் அவர் அங்கிருந்து கார் மூலம் 9.45க்கு சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயில் புறப்படுகிறார். அங்கு தரிசனம் முடிந்து மீண்டும் நாகர்கோவில் வரும் அவர், இந்து கல்லூரி அருகே அம்மன் கோயிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அங்கிருந்து பின்னர் வேப்பமூடு வந்து, காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அங்கிருந்து காரில் வடசேரி உடுப்பி ஓட்டல் செல்லும் அவர், அங்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்து மதியம் 2 மணியளவில்  ஹெலிகாப்டரில் திருவனந்தபுரம் செல்கிறார்.

அமித்ஷா வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி. பத்ரிநாராயணன் தலைமையில் நேற்று காலை நடந்தது. இதில் ஆர்.டி.ஓ. மயில் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள், போக்குவரத்து துறை, மருத்துவ துறை, அறநிலையத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சார துறை, உணவு பாதுகாப்புதுறை  உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அந்தந்த துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாஜ மாவட்ட பொருளாளர் முத்துராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டம் முடிந்ததும் டெல்லியில் இருந்து வந்துள்ள பாதுகாப்பு படையினர், அமித்ஷா  செல்லும் இடங்களை ஆய்வு செய்தனர். அவர்களுடன் எஸ்பி.பத்ரி நாராயணன் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் சென்று இருந்தனர். முன்னாள்  மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் முத்துராமன், தேவ் உள்ளிட்டோரும் சென்றனர். அமித்ஷா செல்லும் இடங்களை ஆய்வு செய்த பாதுகாப்பு படையினர், எந்த மாதிரியான பாதுகாப்பு திட்டங்களை வகுக்க வேண்டும் என்பது பற்றி எஸ்.பி. பத்ரி நாராயணனுடன் கலந்தாலோசனை நடத்தினர். அமித்ஷா வருகையையொட்டி குமரியில் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

Tags : Home Minister ,Amit Shah ,Nagercoil ,
× RELATED தேர்தல் பிரச்சாரத்திற்காக...