பேராவூரணி, மார்ச் 5: பேராவூரணி பேரூராட்சி அலுவலகத்தில் 100 சதவீதம் வாக்களிப்போம் என தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றனர். பேராவூரணி பேரூராட்சி அலுவலகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் மணிமொழியன் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சவுந்தர்ராஜன், குறிச்சி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் அறிவானந்தம், பேரூராட்சி தலைமை எழுத்தர் அருள்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துப்புரவு ஆய்வாளர் அன்பரசன், “பாதுகாப்புடன் வாக்களிப்போம், நேர்மையுடன் வாக்களிப்போம், நூறு சதவீதம் வாக்களிப்போம். எங்கள் வாக்கு விற்பனைக்கல்ல” என்ற விழிப்புணர்வு உறுதிமொழியை வாசிக்க, , சுய உதவிக்குழுவினர், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் திரும்ப வாசித்து உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில், பேரூராட்சி இளநிலை உதவியாளர் ராஜேந்திரன், துப்புரவு மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், பேரூராட்சி பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திரன், பாலசந்தர், சமுதாய அமைப்பாளர் சுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல், பைங்கால் ஊராட்சியில் நடைபெற்ற, வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பேராவூரணி வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜன், ஊராட்சி மன்றத் தலைவர் அமுதா சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.