தென்தாமரைகுளம், மார்ச் 4: அய்யா வைகுண்ட சுவாமியின் அவதார தினத்தை முன்னிட்டு இன்று காலை நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு அவதார தின விழா ஊர்வலம் நடைபெறுகிறது. அய்யா வைகுண்டர் அவதார தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி நேற்று பிற்பகல் 3 மணிக்கு சாமிதோப்பு தலைமைப்பதியின் முன்பு இருந்து ஆதலவிளை மாமலையில் மகா தீபம் ஏற்றுவதற்காக, மகாதீபம் கொண்டுசெல்லும் ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு பையன் கிருஷ்ணராஜ் தலைமை வகித்தார். ஊர்வலம் பொத்தையடி, மயிலாடி வழியாக ஆதலவிளையில் உள்ள மலையை சென்றடைந்தது. பின்னர் அங்கு தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜனாயுகேந்த் மகாதீபத்தை ஏற்றி வைத்தார். நேற்று இரவு நாகர்கோவில் நாகராஜா கோயில் திருமண மண்டபத்தில் அய்யா வழி மாசி மாநாடு நடைபெற்றது. இதில் திருச்செந்தூரில் இருந்து வாகன பேரணியாக வந்த பக்தர்கள் மற்றும் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து நடைபயணமாக வந்த பக்தர்களும் கலந்து கொண்டனர்.இன்று காலை சாமிதோப்புக்கு அவதார தின விழா ஊர்வலம் துவங்குகிறது. அலங்கரிக்கப்பட்ட வாகனம் முன்செல்ல தொடர்ந்து முத்து குடைகளும், மேள தளங்களும் தொடர்ந்து பக்தர்களும் செல்கின்றனர். ஊர்வலத்திற்கு பாலபிரஜாபதி அடிகளார் தலைமை வகிக்கிறார். ஊர்வலம் இடலாக்குடி, சுசீந்திரம், வழுக்கம்பாறை, ஈத்தங்காடு, வடக்கு தாமரைகுளம் வழியாக சாமி தோப்பு தலைமைபதி முன்பு முடிவடைகிறது. ஊர்வலம் வரும் வழிகளில் அப்பகுதியில் உள்ளவர்கள் ஊர்வலத்திற்கு வரவேற்பு கொடுக்கின்றனர். விழா ஏற்பாடுகளை குருபொறுப்பாளர்கள் பையன்கிருஷ்ணராஜ், பையன் கிருஷ்ணநாமமணி, பையன் செல்லவடிவு, பையன் நேம்ரிஷ் செய்து வருகின்றனர்.