×

நுரையீரல் பகுதியில் குடல் ஏற்றத்தால் பாதிப்பு அரசு ராணியார் மருத்துவமனையில் 2 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை

புதுக்கோட்டை, மார்ச் 4: புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி ராணியார் மருத்துவமனையில் நுறையீரலில் குடல் ஏற்றத்துடன் அனுமதிக்கப்பட்ட 2 பச்சிளங்குழந்தைகளுக்கு வெற்றி கரமாக அறுவை சிகிச்சை செய்த டாக்டர்களை டீன் பாராட்டினார். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சுகப்பிரியா மற்றும் ரேவதி ஆகியோருக்கு கர்ப்பகால ஸ்கேன் பரிசோதனையில் இடது புறத்தில் ஒருவிதமான குறைபாட்டால் நுரையீரல் பகுதியில் குடல் ஏற்றம் இருப்பதை கண்டறிப்பட்டது. இதையடுத்து புதக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். 2 பேருக்கும் தலைமை மகப்பேறு மருத்துவர் அமுதா, பச்சிளங்குழந்தைகள் சிறப்பு மருத்துவர் பீட்டர் ஆகியோர் கருவில் உள்ள குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள குறைபாட்டின் தீவிரம், சிகிச்சை முறை குறித்து ஆலோசனை வழங்கினர்.

இதையடுத்து குழந்தை பிறந்தவுடன் கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து 2 குழந்தைகளும் பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டனர். இதையடுத்து குழந்தைகளுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் இடதுபுறம் உள்ள நுரையீரல் பகுதியில் குடல் ஏற்றம் ஏற்பட்டதுடன் நுரையீரல் சுருங்கியும், இருதயம் வலது புறமாக தள்ளப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனால் குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் பாலசுப்பிரமணியம் தலைமையில் மயக்கவியல் மருத்துவர்கள் அறிவரசன், சுபாஷினி ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர், குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் இடதுபுற உதரவிதான குறைபாடு மற்றும் குடல் ஏற்றம் சரி செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சைக்குபின் வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தைகள் உள்ளன. பின்னர் மூச்சு திணறல் சீரானதால் படிப்படியாக செயற்கை சுவாசம் நீக்கப்பட்டு குழந்தைகளுக்கு தாய்ப்பாலும் கொடுக்கப்பட்டது. மூன்று வார தீவிர சிகிச்சைக்கு பிறகு இரண்டு பச்சிளங்குழந்தைகளும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிறப்பாக செயல்பட்டு குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய டாக்டர்கள், செவிலியர்களை மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி பாராட்டினார். நிலைய மருத்துவ அதிகாரி இந்திராணி, மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜ்மோகன் உடனிருந்தனர். இதுகுறித்து மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி கூறியதாவது: சிக்கலான இந்த அறுவை சிகிச்சையை செய்து 2 பச்சிழங்குழந்தைகளின் உயிரை காப்பாற்றியது பாராட்டத்தக்கது. தனியார் மருத்துவமனையில் ரூ.3 லட்சம் வரை செலவாகக்கூடிய இந்த சிகிச்சை, அரசு ராணியார் மருத்துவமனையில் இலவசமாக செய்யப்பட்டுள்ளது என்றார்.

Tags : Government Queen's ,Hospital ,
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...