தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே புளியங்குளம் கிராமத்தில் தனியார் இடத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு திடீரென ஏற்பட்ட இந்த வெடி விபத்தில் பெண் உள்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெடிவிபத்தில் கட்டடம் தரைமட்டமானது இடிபாடுகளில் சிக்கி புளியங்குளத்தைச் சேர்ந்த ஐயப்பன் , விருதுநகர் மாவட்டம் புள்ளகவுண்டன்பட்டியை சேர்ந்த மாலதி ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் சூர்யபிரகாஷ் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார்.
வெடி விபத்து குறித்த தகவல் கிடைத்து கோவில்பட்டி தீயணைப்பு துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளார். மேலும் காயமடைந்த சூர்யபிரகாஷ் என்பவரை மீட்டு மேல் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
கோவில்பட்டி சார் ஆட்சியர், டிஎஸ்பி மற்றும் தாசில்தார் ஆகியோர் சம்பவ இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் இது குறித்து கோவில்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு இது போன்று சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வரும் பட்டாசு ஆலையங்களை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
