ஈரோடு,மே26: ஈரோடு மாநகரத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழை காரணமாக, வஉசி பூங்கா காய்கறி மார்க்கெட் சேறும், சகதியுமாக காட்சியளித்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். ஈரோடு வஉசி பூங்கா காய்கறி மார்க்கெட்டில் 700க்கும் மேற்பட்ட காய்கறி மற்றும் பழக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை மொத்த வியாபாரமும், காலை 7 மணி முதல் காலை 9 மணி வரை சில்லறை வியாபாரமும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவில் பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் முக்கிய பகுதியில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதேபோன்று, வஉசி பூங்காவில் செயல்பட்டு வரும் நேதாஜி மார்க்கெட்டிலும் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியது. இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் ஏற்றி வந்த சரக்கு வாகனங்கள் சகதியில் சிக்கிக்கொண்டது. பின்னர் கூலித்தொழிலாளர்கள் சரக்கு வாகனத்தில் இருந்த காய்கறிகளை இறக்கிவிட்டு பின்னர் வாகனத்தை சகதியில் இருந்து மீட்டனர். வஉசி பூங்கா மைதானம் சேறும்,சகதியுமாக காணப்பட்டதால் பொதுமக்கள் நடக்க முடியாமல் அவதிப்பட்டனர். இதன் காரணமாக நேற்று மார்க்கெட்டில் மக்களின் கூட்டம் குறைவாகவே இருந்தது.
