×

திருவாரூரில் வழிந்தோடும் பாதாள சாக்கடை கழிவு நீரினால் சேதமடையும் சாலைகள்

திருவாரூர், மார்ச் 2: 30 வார்டுகளை கொண்ட திருவாரூர் நகரில் பாதாள சாக்கடை திட்டம் ரூ 50 கோடி மதிப்பில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்டு தற்போது வீடுகளுக்கு இணைப்புகள் கொடுக்கும் பணி நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த திட்டமானது உரிய தரத்துடன் மேற்க்கொள்ளப்படாததால் கழிவுநீர் தொட்டிகளில் நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் அடைப்புகள் ஏற்படுவதும் அதனை நகராட்சி ஊழியர்கள் சரிசெய்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் உரிய தரமில்லாமல் மேற்கொள்ளப்பட்ட இந்த பணியினை தற்போது பராமரிப்பதற்கு நகராட்சி சார்பில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. அதன்படி மாதம் ஒன்றுக்கு ரூ. 4 லட்சத்து 50 ஆயிரம் பராமரிப்பு செலவிற்காக நகராட்சி மூலம் வழங்கப்படுகிறது. இதில் ஒரு குறிப்பிட்ட அளவு தொகையினை கூட செலவு செய்யாமல் அந்த நிறுவனத்தினர் பெருமளவு தொகையினை சுருட்டும் நிலை இருந்து வருகிறது. மேலும் இந்த பாதாள சாக்கடை திட்டத்திற்கென நகரின் பல்வேறு இடங்களில் கழிவுநீரேற்றும் நிலையங்கள் கட்டப்பட்டு அதில் நகராட்சி சார்பில் மின்மோட்டார்கள் அமைத்து கொடுக்கப்பட்ட போதிலும் இந்த தனியார் நிறுவனமானது அதனை கூட சரிவர பராமரிக்காமல் பல்வேறு இடங்களில் பழுது ஏற்ப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல்வேறு நேரங்களில் பல நாட்கள் வரையில் கழிவுநீர் சாலையில் வழிந்தோடும் நிலையே இருந்து வருகிறது. அதன்படி திருவாரூர் ராமகே ரோட்டில் இதுபோன்று பலநாட்கள் வரையில் வழிந்தோடி வரும் பாதாள சாக்கடை கழிவுநீர் காரணமாக அந்த இடத்தில் சாலை சேதமடைந்தது மட்டுமின்றி அதனையொட்டியவாறு பி சேனல் வாய்க்காலில் கட்டப்பட்டிருந்த ரிவிட்மெண்ட் சுவர் நேற்று அடியோடு சாய்ந்தது. இதன் காரணமாக அந்த சாலையை பயன்படுத்தி வரும் பொது மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பெரும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். இதுமட்டுமின்றி இதே ராமகே ரோட்டில் ரயில்வே கேட் அருகே கழிவுநீர் குட்டைபோல் தேங்கியுள்ளது.

இதுபோன்று நகரில் பல்வேறு இடங்களில் பாதாளசாக்கடை கழிவுநீரானது வழிந்தோடுவதால் தற்போது கொரோனா வைரஸ் பீதியில் மக்கள் இருந்து வரும் நிலையில் தொற்று நோய் அல்லது காய்ச்சல் மற்றும் வாந்தி, வயிற்று போக்கு போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு முன்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த பாதாள சாக்கடை கழிவுநீர் வழிந்தோடுவது மற்றும் அடைப்புகளை சரிசெய்வதற்காக தோண்டுவது போன்றவற்றால் நகரில் புதிதாக ரூ பலகோடி மதிப்பில் அண்மையில் போடப்பட்ட பல்வேறு சாலைகள் சேதமடையும் நிலை இருப்பதால் இதனையும் தடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thiruvarur ,
× RELATED 6,417 மாணவர்கள் புதிதாக சேர்க்கை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்