மன்னார்குடி, மார்ச் 2 : ஓய்வு பெறும் வயது 59ல் இருந்து 60 ஆக உயர்த்தியிருப்பதன் மூலம் இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவாகிப் போகும் என்பதால் தமிழக அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு ஊழியர்கள் பணி ஓய்வு வயது 59லிருந்து 60 ஆக மாற்றி ஓராண்டு நீட்டிப்பு வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். தமிழக அரசுப் பணியில் பணிபுரிந்து வரும் அலுவலர்கள், ஊழியர்கள் அரசுப் பள்ளி, கல்லூரிகள், பொது நிறுவன பணியாளர் அனைவருக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருபுறம் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. 45 வயதுக்கு பின் 57 வயது வரை பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கும் தற்போது அகவிலைப்படி, ஒன்றரை ஆண்டுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஓராண்டு நீட்டிப்பினால் ஓய்வூதியம் குறைவை ஈடு செய்யலாம். ஆனால் பல லட்சம் இளைஞர்கள் படித்துவிட்டு வேலைக்காகக் காத்திருக்கும் நிலையே நிலவிவருகிறது.
குறிப்பாக, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப்பெற்று சுமார் 70 ஆயிரம் பேர் வேலைக்கு காத்திருக்கும் நிலையில் அந்த எதிர்பார்ப்பு ஓராண்டு தள்ளிப்போகும் இன்னும் பல பிரச்னைகளை சந்திப்பதோடு மன உளைச்சலையும் ஏற்படுத்தும். எதிர்கால கனவுகளையும் நசுக்கும். தற்போது ஆசிரியர்-அரசு ஊழியர்கள் 5.300 பேர் ஓய்வுபெறும் நிலையில் அவர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் 20 லட்சம் முதல் 1 கோடி வரை பதவிக்கேற்ப வழங்க வேண்டிய சூழலில் சுமார் 5 ஆயிரம் கோடி வரை அரசுக்கு செலவாகும். ஆகையால், தமிழ்நாடு அரசு இந்நிலையினை மேற்கொண்டுள்ளது. ஆனால் நிதிநிலையினை காரணம்காட்டி ஆண்டு தோறும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதினை உயர்த்துவது சரியான தீர்வாகாது.
அரசு ஊழியர்களின் வயது வரம்பினை தீர்க்கமாக 60 வயது அல்லது 30 ஆண் டுகள் பணி நிறைவு. இதில் எது முன்வருகிறதோ அதனை எடுத்துக்கொள்ளலாம். இருப்பினும் காத்திருக்கும் இளைஞர்களின் வேலைவாய்ப்பை கருதி தமிழக அரசுப் பணியாளர்களின் ஓய்வு வயது 59லிருந்து 60 ஆக உயர்த்தியதை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய முன் வர வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.