பெரம்பலூர்,மார்ச் 2: பெரம்பலூரில் உ.வே.சாமிநாத ஐயர் 167வது பிறந்த நாள் விழா, நூல் வெளியீட்டு விழா நடந்தது. விழாவிற்கு அரியலூர் அரசு கலைக்கல்லூரி தமிழாய்வுத்துறை பேராசிரியர் தமிழ்மாறன் தலைமை வகித்தார். எல்ஐசி முகவர் சாரங்கபாணி முன்னிலை வகித்தார்.ரோவர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் வரதராஜன் கலந்து கொண்டு, குரும்பலூர் வரலாற்று நூலாசிரியர் ஜெயபால் ரத்தினம் எழுதிய உ.வே. சாமிநாதஐயரும்-பெரம்பலூரும் என்ற நூலை வெளியிட, அதனை தஞ்சாவூர் சர ஸ்வதி மகால் தமிழ் பண்டிதர் மணிமாறன் பெற்றுக்கொண்டு பேசியதாவது: தமிழகத்தில் அகழாய்வு நடத்துவதற்கு தேவையான நிதியை ஒதுக்க முடியாத அவலநிலையில் தான் தமிழக அரசு உள்ளது. கீழடி போல பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டால், பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய காலத்து அதிசயங்கள், வரலாறுகள், உயிரினத்தோன்றல்கள் குறித்த தகவல்கள் உலகிற்கே தெரிய வந்திருக்கும். தமிழகத்திலிருந்து கடந்த நூற்றாண்டுகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டுவிட்டன. அவை அங்கு குளிர்சாதன பெட்டிகளில்தான் வைக்கப்பட்டுள்ளன. பெரம்பலூர் மாவட்டத்தில் அந்த காலத்தில் செங்குணம், குன்னம், காருகுடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வசித்த தமிழறிஞர்களை தேடித்தேடி சென்றுதான் உ.வெ.சாமிநாத அய்யர் தமிழ்மொழியை பயின்றுள்ளார் என்றார். பிறகு தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக இலக்கியத்துறை பேராசிரியர் திலகவதி நூலை அறிமுகப்படுத்தி பேசினார்.