அறந்தாங்கி, மார்ச் 1: அறந்தாங்கி அருகே சட்ட விரோதமாக பதுக்கி வைத்த 60 யூனிட் ஆற்று மணலை வருவாய்துறையினர் பறிமுதல் செய்தனர். அறந்தாங்கியை அடுத்த ஆளப்பிறந்தான், கோங்குடி அத்தாணி பகுதியில் சிலர் வெள்ளாறில் இருந்து சட்டவிரோதமாக மணல் அள்ளி வந்து குவித்து வைத்து லாரிகளில் ஏற்றி கடத்துவதாக தாசில்தார் சூரியபிரபுவிற்கு தகவல் வந்தது. தகவலின் பேரில் தாசில்தார் சூரிய பிரபு, வருவாய் ஆய்வாளர் மதியழகன் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது ஆளப்பிறந்தான், கோங்குடி அத்தாணி பகுதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 60 யூனிட் மணலை பறிமுதல் செய்தனர். இந்த மணலை ரூ.79 ஆயிரத்து 800க்கு அதிகாரிகள் விற்பனை செய்து தொகையை கருவூலத்தில் செலுத்தினர்.