ஓசூர், மார்ச் 1: ஓசூர் அருகே திம்மராயசுவாமி கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். ஓசூர் அடுத்த குடிசெட்லு கிராமத்தில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத திம்மராயசாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் நடப்பாண்டு திருவிழா பிப்ரவரி 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் தமிழகம் மட்டுமின்றி, கர்நாடக, ஆந்திர மாநில பக்தர்கள் பங்கேற்று திம்மராயசாமியை வழிபட்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் தேவி, பூதேவி சமேத திம்மராயசாமி அமர்த்தப்பட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க தேரை வடம்பிடித்து இழுத்தனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது, பக்தர்கள் முக கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்தனர். பாகலூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.