உத்திரமேரூர், மார்ச் 1: உத்திரமேரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா நேற்று நடந்தது. விழாவில் அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார், கௌரவ தலைவர் விநாயகம், செயலாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், வணிகர்கள் பாதுகாப்பிற்காக உணவு பொருள் கலப்படம் கண்டறிதல், தராசு முத்திரை மற்றும் சான்றிதழ் வழங்கல், வங்கி கடன் பெறுவதற்கான வழிமுறைகள், வியாபாரிகளுக்கு ஏற்படும் சட்ட சிக்கல்கள் வழிகாட்டுதல், பேரூராட்சி நிர்வாகத்தின் நடைமுறைகளுக்கு ஒத்துழைப்பு நல்குதல் உள்ளிட்ட ஐம்பெரும் விழா நடைபெற்றது.
உணவு பாதுகாப்பு துறை அலுவலர் அமுதா மற்றும் விமலவிநாயகம் ஆகியோர் கலந்துகொண்டு உணவு பொருள் கலப்படம் மற்றும் பாதுகாப்பு குறித்து விளக்கி கூறினர். மேலும், பேரூராட்சி ஆய்வாளர் ரவிசங்கர் கலந்துகொண்டு பேரூராட்சி விதிமுறைகளை குறித்து வியாபாரிகளுக்கு எடுத்து கூறினார். தனியார் வங்கி மேலாளர் கண்ணன் கலந்துகொண்டு வியாபாரிகள் கடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கினார். தராசு, முத்திரையிடுதல் மற்றும் சான்றிதழ் வழங்குதல் காவல்துறையின் சட்டம் ஒழுங்கு வழிகாட்டுதல் உள்ளிட்டவைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இதில், உத்தரமேரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.