செய்யூர், மார்ச் 1: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்தில் அரியனூர் ஊராட்சி உள்ளது. இங்கு, விவசாயிகள் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் விவசாயப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவசாய நிலங்களில் உள்ள மோட்டார் பம்ப் செட்டுகளுக்கு. இங்குள்ள விவசாய நிலங்களில் ஆங்காங்கே மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு அதன் வழியாக மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கடுகபட்டு துணை மின் நிலைய கட்டுப்பாட்டிலுள்ள இந்த மின் இணைப்புகளை மின்வாரிய ஊழியர்கள் முறையாக பராமரிப்பதில்லை என இப்பகுதி விவசாயிகளிடைய குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இதற்கு காரணம், பல வருடங்களாக கம்பங்களில் செல்லும் மின் வயர்கள் பிடிப்பிழந்து தரையிலிருந்து கை தொடும் அளவிற்கு தாழ்வாக செல்கின்றன. பொன்னியம்மன் கோயில் அருகே சுமார் 3க்கும் மேற்பட்ட இடங்களில் இதுபோன்று மின் வயர்கள் தாழ்வாக செல்வதால் அப்பகுதிகளில் விவசாயிகள் அச்சத்துடன் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தாழ்வாக செல்லும் மின் வயர்களை சரி செய்யக்கோரி அப்பகுதி விவசாயிகள் மின்வாரிய துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், அதற்கான நடவடிக்கையை மின்வாரிய துறை அதிகாரிகள் ஈடுபடவில்லை என விவசாயிகள் புலம்புகின்றனர்.
பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகளே, தாழ்வாக உள்ள மின் வயர்களை கொம்பு வைத்து முட்டு கொடுத்து உயர்வாக கைக்கு எட்டாத வகையில் உயர்வாக செல்லுமாறு அமைத்துள்ளனர். இதனால் தங்களுக்கு தற்காலிக பாதுகாப்பு மட்டுமே என்பதால் உயிர் இழப்பு உள்ளிட்ட விபத்துக்கள் நேரிடுவதற்கு முன் மாவட்ட மின்வாரியத்துறை இதற்கு உரிய தீர்வு காண வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.