- திரிணாமுல்
- மத்திய உள்துறை அமைச்சகம்
- கொல்கத்தா
- அஜய்பால் சர்மா
- ஐரோப்பிய ஒன்றிய அரசு
- மேற்கு வங்கம்
- உத்திரப்பிரதேசம்
கொல்கத்தா: சர்ச்சையில் சிக்கிய ஐபிஎஸ் அதிகாரி அஜய்பால் சர்மா மேற்கு வங்காளத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகள் பணியாற்ற ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான அஜய்பால் சர்மா, உத்தரப்பிரதேச மாநிலத்தில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டாகப் பணியாற்றி ‘உ.பி சிங்கம்’ என்று பெயர் பெற்றவர் ஆவார். இவர் மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்காகச் சிறப்பு போலீஸ் பார்வையாளராக நியமிக்கப்பட்டார். கடந்த ஏப்ரல் மாத இறுதியில் பால்டா தொகுதியில் தேர்தல் பிரசாரம் நடந்தபோது, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் வீட்டிற்குச் சென்று வாக்காளர்களை மிரட்டக்கூடாது என எச்சரித்த இவரது வீடியோ வைரலானது.
அதற்குப் பதிலடி கொடுத்த ஜஹாங்கீர் கான் ‘அவர் சிங்கமாக இருந்தால் நான் புஷ்பா’ என்று சவால் விட்டார். இதனைத் தொடர்ந்து அஜய்பால் சர்மாவை தேர்தல் பணியிலிருந்து நீக்கக்கோரி திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த புகார்களை நிராகரித்த தேர்தல் ஆணையம், அஜய்பால் சர்மாவின் கள அறிக்கைகளை ஏற்று பால்டா இணை பிடிஓ உட்பட பல அதிகாரிகளை அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்தது. இந்நிலையில், தேர்தல் கால தற்காலிகப் பணி முடிவடைந்ததைத் தொடர்ந்து, நேற்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பில், அஜய்பால் சர்மாவை அடுத்த 5 ஆண்டுகள் காலத்திற்கு மேற்கு வங்காள கேடரிலேயே பணியாற்றுவதற்கு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன் மூலம் அவர் மேற்கு வங்காளத்திலேயே தங்கிப் பணியாற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பாஜக அரசின் கீழ், அங்குள்ள போலீஸ் நிர்வாகத்தை முழுமையாகச் சீரமைக்கும் வியூகமாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. அஜய்பால் சர்மா அங்குள்ள சிறப்பு அதிரடிப் படை அல்லது தீவிரவாத தடுப்புப் பிரிவுகளில் முக்கியப் பொறுப்பை ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை அம்மாநில அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
