நாமக்கல், பிப்.26: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சுகாதாரத்துறை இணை செயலாளர் நடராஜன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா தடுப்பு பணி மற்றும் மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆண்டு கல்லூரியை திறக்கும் வகையில் பணிகள் நடைபெறுகிறதா என ஆய்வு செய்யப்பட்டது. இதற்கான அறிக்கை சுகாதாரத்துறை செயலாளரிடம் சமர்ப்பிக்கப்படும்.
நாமக்கல் மாவட்டத்தில் 8 ஆயிரம் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வரும் 1ம்தேதி முதல் 65 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, சுகாதார நலப்பணிகள் இணை இயக்குர் சித்ரா, துணை இயக்குனர் டாக்டர் சோமசுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.