×

புயல், மழையால் பயிர்கள் சேதம் 1,841 விவசாயிகளுக்கு ரூ.2.94 கோடி நிவாரணம்

திருப்பூர், பிப்.26: திருப்பூர் மாவட்டத்தில் புயல், மழையால் பயிர்கள் சேதமடைந்ததால் 1,841 விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன்  வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் 2020-21ம் ஆண்டு புரவி புயல் மற்றும் காலம் தவறிய வடகிழக்கு பருவமழை காரணமாக சுமார் 1500 ஹெக்டர் பரப்பளவில் வேளாண், தோட்டக்கலை பயிர்களான நெற்பயிர்கள், சோளம், மக்காச்சோளம், உளுந்து மற்றும் கொண்டை கடலை பயிர்கள் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன.

இதனை வேளாண்மை இணை இயக்குநர், தோட்டக்கலை துணை இயக்குநர் தலைமையில் வேளாண்மை தோட்டக்கலை உள்ளடக்கிய சேதார கண்காணிப்பு குழு, வட்டாரம் வாரியாக நேரில் ஆய்வு செய்து 33 சதவீதம் மேல் பாதிப்பு உள்ள விவசாயிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு நிவாரணத்திற்கு அனுப்பப்பட்டது. அதன்படி புரவி புயலினால் உடுமலை வட்டாரத்தில் இறவை பயிர்களில் 10 ஹெக்டர் பரப்பளவிலும், குடிமங்கலம் வட்டாரத்தில் 18 ஹெக்டர் பரப்பளவிலும் ஏற்பட்ட சேதாரம் கணக்கிடப்பட்டு 36 சிறு குறு விவசாயிகளுக்கு ரூபாய் 25 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.

உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம், வெள்ளக்கோவில், பொங்கலூர் ஆகிய வட்டாரங்களில் காலம் தவறிய வடகிழக்கு பருவமழையினால் 960 ஹெக்டர் பரப்பளவில் வேளாண்மை மற்றும் 514 எக்டர் பரப்பளவில் தோட்டக்கலை பயிர்களில் சேதாரம் ஏற்பட்டு சுமார் 1805 விவசாயிகளுக்கு 2 கோடியே 69 லட்சம் இழப்பீடு நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED அமைச்சர் முன்னிலையில் பாஜவினர் 100 பேர்...