×

ஆரணி அருகே வேலியே பயிரை மேய்ந்த கொடுமை 14 வயது மகளை கர்ப்பமாக்கிய தந்தை போக்சோ சட்டத்தில் கைது

ஆரணி, பிப்.26: ஆரணி அருகே மகளை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தந்தையை ேபாலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் சிறுமி வீட்டில் இருந்தார்.இந்நிலையில், பள்ளி திறக்கப்பட்டதால் கடந்த சில வாரங்களாக சிறுமி பள்ளிக்கு சென்று வந்துள்ளார். அப்போது, சிறுமிக்கு அடிக்கடி பள்ளியில் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் சிறுமியின் பாட்டியை பள்ளிக்கு வரவழைத்து விசாரித்தனர். அதற்கு அவர் சிறுமிக்கு வயிற்றில் கட்டி இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் ஆசிரியர்கள் மூதாட்டியுடன் சிறுமியை ஆரணி அடுத்த காமக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது டாக்டர்கள் பரிசோதித்ததில் சிறுமி 8 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் திருவண்ணாமலை மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு போனில் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சமூகநலத்துறை அதிகாரிகள் அங்கு வந்து சிறுமியை மீட்டு திருவண்ணாமலை காப்பகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து சமூகநலத்துறை அதிகாரிகள் ஆரணி மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) அன்புக்கரசி சிறுமியின் பாட்டியை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்தனர்.
அப்போது, சிறுமியின் தாய் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சிறுமியுடன் தந்தை கன்னியப்பன்(49), நிர்வாணமாக படுத்து கொண்டிருந்ததை கவனித்த சிறுமியின் பாட்டி கன்னியப்பனை கண்டித்துள்ளார். அதற்கு கன்னியப்பன் ‘இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் இருவரையும் கொலை செய்து விடுவேன்’ என மிரட்டினாராம். இதனால் சிறுமியின் பாட்டி இந்த விஷயத்தை வெளியில் சொல்லாமல் இருந்து வந்ததாக தெரிவித்தார். உடனே போலீசார் சிறுமியின் தந்தை கன்னியப்பனை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, சிறுமியை பல மாதங்களாக மிரட்டி பலாத்காரம் செய்து வந்ததாகவும், இதனால், சிறுமி 8 மாத கர்ப்பமானது தெரிய வந்தது தெரியவந்தது.இதுகுறித்து சிறுமியின் பாட்டி கொடுத்த புகாரின்பேரில், ஆரணி மகளிர் போலீசார் கன்னியப்பனை போக்சோ சட்டத்தில் கைது செய்து ஆரணி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வேலியே பயிரை மேய்ந்த கதையாக, பெற்ற மகளை தந்தையே பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Arani ,
× RELATED 1,040 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா...