×

பிரதமர் வந்து சென்றவுடன் புதுவையில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது கவர்னர் கட்டுப்பாட்டில் அரசு இயந்திரம்

புதுச்சேரி, பிப். 26: புதுச்சேரியில் நேற்று மாலை முதல் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து  உத்தரவு வெளியாகியுள்ளது.  இதனால் அரசின் அனைத்து நடவடிக்கைகளும் கவர்னர் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.புதுச்சேரியில் நடந்த காங்கிரஸ் ஆட்சியில் அடுத்தடுத்து 6 எம்எல்ஏக்கள் பதவி விலகியதால் பெரும்பான்மை இழந்தது.  தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு தோல்வியடைந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.  முதல்வர், தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் தமிழிசையிடம் கொடுத்தார். இதற்கிடையே சபாநாயகரின் அறிக்கை, அமைச்சரவை ராஜினாமா உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சேர்த்து அறிக்கையாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உள்துறைக்கு அனுப்பி வைத்தார். இதுதொடர்பாக அரசிதழிலும் வெளியிடப்பட்டது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்திலும் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதற்கான பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதற்கிடையே பிரதமர் மோடி நேற்று ஒருநாள் பயணமாக  புதுச்சேரி வருகை தந்தார். ஜிப்மரில் நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்டப்பணிகளுக்கு மோடி அடிக்கல் நாட்டினார்.  அதன்பின்னர் லாஸ்பேட்டையில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். பிரதமர் புதுச்சேரிக்கு வந்து சென்றவுடன் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியானது. அதேபோல் நேற்று மாலை குடியரசு தலைவர் அலுவலகத்திலிருந்து இதற்கான உத்தரவு முறைப்படி வெளியானது. அதில் கூறியிருப்பதாவது:  கடந்த 22ம் தேதி புதுச்சேரி கவனர்னரிடமிருந்து அறிக்கை கிடைத்தது. பிற தகவல்கள் மற்றும் அறிக்கையை பரிசீலித்த பிறகு, திருப்திகரமாக இருந்தது. எனவே புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டம் 1963 பிரிவு 20ன்படி புதுச்சேரி ஆட்சி நிர்வாகத்தை  முன்னெடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டம் 51ன்படி அனைத்து அதிகாரங்களும் குடியரசு தலைவர் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதால் புதுச்சேரி அரசு நிர்வாகத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேரடியாக கவனிப்பார். சட்டசபை தேர்தல் முடிந்து மக்கள் பிரதிநிதிகள் ஆட்சி அமைக்கும் வரை இந்த நிலை நீடிக்கும்.

Tags : Puthuvai ,
× RELATED புதுவையில் என்ஆர் காங்கிரஸ் பிடி...