×

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு நீட் சிறப்பு பயிற்சி வகுப்புகள்: ஆணையர் துவக்கி வைத்தார்

சென்னை, பிப்.26: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சென்னை  பள்ளிகளில் 2020-21ம் கல்வியாண்டில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு, நீட் என்னால் முடியும் சிறப்பு பயிற்சி திட்டத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேற்று துவக்கி வைத்தார். 2020-21ம் கல்வியாண்டில் அதிக எண்ணிக்கையிலான மாணவ, மாணவியர் எம்.பி.பி.எஸ். மருத்துவ கல்வியில் சேர்ந்து பயிலும் வகையில் Inner Wheel District 323 மற்றும் கிண்டி பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்களின் கூட்டமைப்பு ஆகியவை மூலம் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு நீட் சிறப்பு பயிற்சியை 100 நாட்களுக்கு இலவசமாக அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சென்னை  பள்ளிகளில் 2020-21ம் கல்வியாண்டில் பயிலும் மாணவ, மாணவியர்கள் நீட் தேர்வில் வெற்றிபெற்று எம்.பி.பி.எஸ். மருத்துவ பட்ட படிப்பு பயிலும் வாய்ப்பை பெறுவதற்காக ‘நீட் என்னால் முடியும் சிறப்பு பயிற்சி’ திட்டத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேற்று துவக்கி வைத்தார். சென்னை பள்ளிகளில் பயிலும் 100 மாணவ, மாணவியர்களை தேர்வு செய்ய சென்னை வடக்கு பகுதி மாணவர்களுக்கு எம்.எச். சாலையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், சென்னை தெற்கு பகுதி மாணவர்களுக்கு புலியூர் சென்னை மேல்நிலைப் பள்ளியிலும் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டது.

இதில் எம்.எச். சாலை பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய 103 மாணவ, மாணவியரில் 50 மாணவ, மாணவியர், புலியூர் பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய 130 மாணவ, மாணவியரில் 51  மாணவ, மாணவியர்கள் என மொத்தம் 101 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தக்க வல்லுநர்களை கொண்டு 100 நாட்களுக்கு முழுமையான நீட் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் இணை ஆணையர் (கல்வி) (பொறுப்பு)  ஸ்ரீதர், உதவி கல்வி அலுவலர்கள், கிண்டி பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்களின் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Chennai Corporation ,
× RELATED திருவான்மியூர் கடற்கரையில் வானில்...