×

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சன் ரைசர்ஸ் அணி அமர்க்கள வெற்றி: சேசிங்கில் 249 ரன்கள் விளாசி அசத்தல்

மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 249 ரன்கள் குவித்து அமர்க்கள வெற்றி பெற்றது. ஐபிஎல் 19வது தொடரின் 41வது போட்டி மும்பை வாங்கடே திடலில் நேற்று நடந்தது. அதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து மும்பை அணியின் துவக்க வீரர்களாக வில் ஜாக்ஸ், ரையான் ரிக்கெல்டன் களமிறங்கினர். இந்த இணை சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. பவர்பிளேவில் வீசப்பட்ட 6 ஓவர்களில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 78 ரன்கள் விளாசியது.

அதன் பின், நிதிஷ் குமார்ரெட்டி வீசிய 8வது ஓவரில் வில் ஜாக்ஸ் (22 பந்து, 3 சிக்சர், 5 பவுண்டரி, 46 ரன்) தூக்கியடித்த பந்தை இஷான் கிஷண் கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் (5 ரன்), ஈஷன் மலிங்கா வீசிய 9வது ஒவரில், அபிஷேக் சர்மாவிட் கேட்ச் தந்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, நமன் திர் (22 ரன்), பிரபுல் ஹிங்கே வீசிய 14வது ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஒரு புறம் விக்கெட்டுகள் விழுந்தபோதும், மறுபுறம் நங்கூரமாய் நின்று ஆடிக்கொண்டிருந்த துவக்க வீரர் ரையான் ரிக்கெல்டன், 44 பந்துகளில் 7 சிக்சர், 8 பவுண்டரிகளுடன் 100 ரன்னை எட்டினார். கடைசி கட்டத்தில், ரையான் ரிக்கெல்டன், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா இணை சேர்ந்து அட்டகாசமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இவர்களின் அதிரடியால், 15.5 ஓவரில் மும்பை அணி 200 ரன்களை எட்டியது.

அந்நிலையில், 19வது ஓவரை வீசிய ஷகிப் உசேன், ஹர்திக் பாண்ட்யாவை (31 ரன்) ஆட்டமிழக்கச் செய்தார். 20 ஓவர் முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் குவித்தது. ரையான் ரிக்கெல்டன் (55 பந்துகள், 8 சிக்சர், 10 பவுண்டரி, 123 ரன்கள்) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். சன்ரைசர்ஸ் தரப்பில் பிரபுல் ஹிங்கே, ஈஷன் மலிங்கா, ஷகிப் உசேன், நிதிஷ் குமார் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். பிரமாண்ட இலக்கான 243 ரன்னை சேஸ் செய்து ஆடிய சன் ரைசர்ஸ் அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 249 ரன்களை விளாசி அபார வெற்றி பெற்றது.

* 18 ஆண்டு சாதனை முறியடித்த ரிக்கெல்டன்: 55 பந்துகள், 8 சிக்சர், 10 பவுண்டரி, 123 ரன்கள்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக மும்பை அணியின் துவக்க வீரராக களமிறங்கிய ரையான் ரிக்கெல்டன் அதிரடியாக ஆடி 44 பந்துகளில் 100 ரன்னை எட்டினார். இதன் மூலம் நடப்பு தொடரில் மும்பை அணிக்காக சதம் விளாசிய 3வது வீரராக உருவெடுத்தார். மேலும், மும்பை அணிக்காக ஐபிஎல் வரலாற்றில் அதிவேக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். கடந்த 2008ல், 18 ஆண்டுக்கு முன், சென்னை அணிக்கு எதிராக மும்பை அணியின் சனத் ஜெயசூரியா 45 பந்துகளில் சதம் விளாசியதே இதுவரை சாதனையாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Sunrisers ,Amaral ,Mumbai Indians ,Chasing ,Vlasi Asath ,Mumbai ,Amberal ,IPL 19th series ,Wangade Thidal, Mumbai ,Sunrisers Hyderabad ,
× RELATED சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: அரை இறுதியில் 5 கோல் அசத்தலாய் வென்ற பிஎஸ்ஜி