மார்த்தாண்டம், பிப்.25: மார்த்தாண்டம் அருகே மகாவிஷ்ணு கோயிலில் கொள்ளையடித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மார்த்தாண்டம் அருகே உள்ள செம்மங்காலை கோயில்விளையில் இரணிமங்கலம் மகாவிஷ்ணு கோயில் உள்ளது. இந்த கோயிலில் இருதினங்களுக்கு முன் இரவு மர்ம நபர்கள் புகுந்து உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம், அலுவலக மேஜையை உடைத்து அதில் இருந்து பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றிருந்தனர். இது குறித்து கோயில் செயலாளர் ராதாகிருஷ்ணன் மார்த்தாண்டம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார், சப் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். இதில், 2 வாலிபர்கள் இரும்பு கம்பியுடன் வந்து பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதன்படி மருதங்கோடு பகுதியை சேர்ந்த ஸ்டாலின் (24), சஞ்சய் (24) ஆகிய 2 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.