நாசரேத்,பிப்.24: நாசரேத் அருகே உள்ள மாதாவனம் 2வது கைலாசபுரம் தெருவைச்சேர்ந்தவர் ஞானபிரகாசம் மகன் ஜஸ்டின் கனகராஜ்(59).
இவர் மூக்குப்பீறி நகர கூட்டுறவு வங்கியின் குரும்பூர் கிளையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம் 31ம் தேதி தோப்பூரில் நடந்த திருவிழாவில் பங்கேற்க தனது தாய் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று விட்டார். பின்னர் அவர் மட்டும் வீட்டிற்கு காலை, மாலை வந்து செல்வார். நேற்று காலை வீட்டிற்கு வரும்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த நகை மற்றும் ரூ 5ஆயிரம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து ஜஸ்டின் கனகராஜ் நாசரேத் போலீசில் புகார் செய்தார். நாசரேத் எஸ்.ஐ அனந்தமுத்துராமன் வழக்குபதிவு செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகிறார்.