சத்தியமங்கலம், பிப். 24: சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரியின் 20வது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கத்தில் நடந்தது. விழாவிற்கு பண்ணாரிஅம்மன் குழுமங்களின் தலைவர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். டி.வி.எஸ் குழுமங்களின் தலைவர் வேணு சீனிவாசன் 1,721 மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில், ‘‘அமெரிக்கா உருவாக்கிய கூகுள், பேஸ்புக், வாட்ஸ் ஆப், டிவிட்டர், அமேசான் போன்ற தொழில்நுட்பங்களை நாம் பயன்படுத்தி வருகிறோம். மாணவர்கள் இது போன்ற புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும். அமெரிக்கா போன்று தொழில்நுட்பத்தில் சீனாவும் முயன்று வருகிறது. தன்னம்பிக்கை இல்லாமல் எதையும் சாதிக்கமுடியாது.
கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சமூதாய சிந்தனை கொண்டவர்களாக இருக்க வேண்டும். கொடைக்கானல் மலைப்பகுதி உள்ளிட்ட பல இடங்களில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் வசித்து வரும் பழங்குடியினருக்கு மாணவர்கள் உதவ வேண்டும்,’ என்றார். இதைத்தொடர்ந்து கவுரவ விருந்தினராக கலந்துகொண்ட கோவை பிரிக்கால் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் வனிதா மோகன் பேசினார். சிறந்த மாணவிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட அருந்ததி, தேவதர்ஷினி ஆகிய இருவருக்கும் தங்க பதக்கம் வழங்கப்பட்டது. விழாவில் கல்லூரி அறங்காவலர் விஜயகுமார், முதல்வர் பழனிச்சாமி மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.