ஆரணி, பிப்.23: ஆரணி அடுத்த தச்சூர் பொறியல் கல்லூரியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை, அறிவியல், பாலிடெக்னிக், பொறியில் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 2 ஜிபி டேட்டா கார்டு வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். செய்யார் எம்எல்ஏ தூசி மோகன், மாவட்ட கூட்டுறவு பண்டக சாலை தலைவர் ஜி.வி.கஜேந்திரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் கோவிந்தராசன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் சங்கர், ஆவின் துணை தலைவர் பாரிபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறியல் கல்லூரி முதல்வர் அருளரசன் வரவேற்று பேசினார். இதில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு 683 மாணவர்களுக்கு இலவச 2 ஜிபி டேட்டா கார்டு வழங்கி பேசுகையில், மாவட்டத்தில் ஆரணி, செய்யார், திருவண்ணாமலை, வந்தவாசி, தெள்ளார் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மற்றும் கலை, அறிவியல், பாலிடெக்னிக், பொறியல் கல்லூரிகளில் படிக்கும் மொத்தம் 22 ஆயிரத்து 572 மாணவர்களுக்கு அரசின் 2 ஜிபி டேட்டா கார்டு வழங்கப்படுகிறது. அதன்படி, தச்சூர் பொறியல் கல்லூரியில் 683 மாணவர்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு 2 நாட்களில் வழங்கி முடிக்கப்படும் என்றார். தொடர்ந்து ஆரணி அடுத்த தச்சூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் திருவண்ணாமலை மண்டலம் சார்பில் காரீப் பட்டத்திற்கான நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.