சாத்தான்குளம், பிப். 23: சாத்தான்குளம் அருகே மனவளர்ச்சி குன்றிய இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்தும், அவரது குடும்பத்துக்கு அரசு நிதி வழங்க கோரியும் தென்மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்க மாநில துணை செயலாளர் பேர்சில் தலைமையில் மாவட்ட செயலாளர் பாலமுருகன், மகளிரணி மாவட்ட செயலாளர் அழகுலட்சுமி முன்னிலை வகித்தனர். இதில் சங்க சட்ட ஆலோசகர் வக்கீல் கிரீஸ்குமார், கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்க செயலாளர் மார்ட்டீன், செயலாளர் ராஜன் ஆகியோர் பேசினர். போராட்டத்தில் திரளான மாற்று திறனாளிகள், பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குடும்பத்தினர் பங்கேற்றனர். போராட்டம் நடத்தியவர்களிடம் சாத்தான்குளம் தாசில்தார் லட்சுமிகணேஷ், இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சாம்சன் ஜெபதாஸ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சம்பவம் தொடர்பாக அமைச்சர் மற்றும் கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என போராட்ட குழுவினர் வலியுறுத்தினர்.
இதையடுத்து சாத்தான்குளம் டிஎஸ்பி காட்வின் ஜெபதாஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. திருச்செந்தூர் ஆர்டிஓ தனப்பிரியா மாலையில் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் போராட்டக்குழுவினர் முதலமைச்சர், மாவட்ட கலெக்டர் நிதியில் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். அதில் ஆர்டிஓ, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பசுமை வீடு திட்டத்தில் வீடு கட்டி கொடுக்கப்படும், அவரது தாயாருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். மாற்றுத்திறனாளி சகோதரிகளான இருவருக்கும் அரசு சார்பில் தலா ரூ.1500 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். இதற்கிடையே காவல்துறை சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரத்தை டிஎஸ்பி காட்வின் ஜெகதீஸ்குமார் வழங்கினார். அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.