விழுப்புரம்: அன்புமணியின் துரோகக் கும்பலுக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வருகிற 23ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலையுடன் ஓய்கிறது. இதனால், அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இறுதிக்கட்ட பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்; அன்புமணியின் நோக்கம் மக்களுக்கு நல்லது செய்வது அல்ல; பணம் சம்பாதிப்பதுதான் இவர்களின் வேலை.
நான் வளர்த்தெடுத்த பிள்ளைகள் பணத்துக்காக அணி மாறி கொள்கையற்ற’ துரோக கூட்டத்தில் இணைந்துள்ளார்கள். அதிகாரத்தை பணமாக்கும் கலைக்காகவே பயன்படுத்த நினைக்கிறார்கள். முக்கிய தருணங்களில் கூட மகனாகத் தன் கடமையைச் செய்யாதவர்தான் அன்புமணி. அண்மையில் உடல்நலக் குறைவால் சேலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டேன். நான் சிகிச்சையில் இருந்தபோது நேரில் வந்து கூட நலம் விசாரிக்காதவர்தான் அன்புமணி;
மனைவியை போட்டியிடச் செய்யும் அன்புமணி, நேராக களமிறங்கலாமே? இந்தியாவிலே குறைவான நாட்கள் நாடாளுமன்றம் சென்ற எம்.பி. அன்புமணிதான். அன்புமணியின் துரோகக் கும்பலுக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம். 18 தொகுதிகளிலும் அன்புமணி தரப்பு வேட்பாளர்கள் தோற்க வேண்டும் என்று கூறினார்.
