×

ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி கடலூரில் பரபரப்பு

கடலூர். பிப். 23: கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று மதியம் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்தார். பின்னர் அவர் திடீரென தான் கேனில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அவரை தடுத்து, அவரது கையில் இருந்த தீப்பெட்டி மற்றும் மண்ணெண்ணெய் கேனை பிடுங்கினர். பின்னர் அங்கு வந்த போலீசார், அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சிதம்பரம் அடுத்த ஓடாக்கநல்லூரை சேர்ந்த அய்யம்மாள் (37) என்பதும், இவர் காட்டுமன்னார்கோவில் அடுத்த மோவூரை சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவரை காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், அய்யம்மாள் தனது பெற்றோர் சொத்தில் பங்கு கேட்டதும், அதற்கு அவரது சகோதரர்கள் கொடுக்க மறுத்து, அடித்து விரட்டியதும், அதனால் சொத்தில் பங்கு தர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார், அய்யம்மாளை விசாரணைக்காக கடலூர் புதுநகர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Cuddalore ,
× RELATED ஆட்டோ மீது லாரி மோதியதில் இருவர் உயிரிழப்பு