திருவாரூர், பிப். 23: பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து திருவாரூரில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மத்திய அரசின் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வினை கண்டித்தும் அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் விலை உயர்வு குறித்து வாய் திறக்காத தமிழக அரசைக் கண்டித்தும் நேற்று மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி திருவாரூரில் மாவட்ட திமுக சார்பில் ரயில் நிலையம் முன்பாக மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ வு மான பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது. இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தலையாமங்கலம் பாலசுப்ரமணியன், மன்னார்குடி ஞானசேகரன், விவசாய அணி மாநில செயலாளர் ஏ கே எஸ் விஜயன், எம்எல்ஏ ஆடலரசன், முன்னாள் எம்எல்ஏ ராஜமாணிக்கம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக பொறுப்பாளர்கள், சார்பு அணி பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். முடிவில் திருவாரூர் நகர செயலாளர் வாரை பிரகாஷ் நன்றி கூறினார்.