×

ஏரியில் பிணமாக மிதந்த அதிமுக நிர்வாகியின் கணவர் கொடைக்கானலில் பரபரப்பு

கொடைக்கானல்,பிப். 23: கொடைக்கானலில் முன்னாள் அதிமுக ஒன்றிய கவுன்சிலரின் கணவர் மர்மமான முறையில் நட்சத்திர ஏரியில் பிணமாக மிதந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானல் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் காந்திமதியின் கணவர் சந்திரன்(47). காந்திமதி அதிமுகவின் முன்னாள் வில்பட்டி ஒன்றிய கவுன்சிலராக இருந்தவர். கடந்த மூன்று நாட்களாக சந்திரன் வீட்டுக்கு வராமல் இருந்துள்ளார். இதுகுறித்து கொடைக்கானல் போலீசில் காந்திமதி புகார் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து நேற்று கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் நகராட்சி அலுவலகம் எதிரே சடலம் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் படகு மூலம் சடலத்தை மீட்டனர். விசாரணையில், குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்த சந்திரன் என்பதும், மூன்று தினங்களுக்கு முன்பு காணாமல் போனவர் என்பதும் தெரியவந்தது. சந்திரனின் உடலை மீட்ட போலீசார், தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கொடைக்கானல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முன்னாள் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் கணவர் தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது கொலை செய்து ஏரியில் வீசப்பட்டாரா? என்பது பற்றி  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : AIADMK ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...