×

பக்தர்கள் பால்குட ஊர்வலம்

சாயல்குடி, ஏப்.13: கிடாத்திருக்கை முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவையொட்டி பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்றினர். முதுகுளத்தூர் அருகே கிடாத்திருக்கை முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் உற்சவ விழா நடந்தது. கடந்த ஏப்.5ல் கோயில் வளாகத்தில் கணபதி ஹோமம் செய்யப்பட்டு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. இரவில் கோயில் வளாகம் முன்பு பெண்கள் கும்மியடித்தும், இளைஞர்கள் ஒயிலாட்டமாடி கொண்டாடி மகிழ்ந்தனர்.

தொடர்ந்து கோயில் விளக்கு பூஜை, தொட்டில் தாலாட்டு, மாவிளக்கு எடுத்து வேண்டுதல் நிறைவேற்றம் பூஜை நடந்தது. நேற்று காலையில் பால்குடம் பக்தர்களால் எடுக்கப்பட்டு அம்மனுக்கு அபிஷேகமும், மகா தீபாராதனை நடந்தது. மாலையில் அக்னிச்சட்டி, ஆயிரம் கண் பானை ஊர்வலம் நடந்தது. கோயில் வளாகத்தில் விளையாட்டுப் போட்டிகள், ரங்கோலி கோல போட்டிகள் நடந்தது. இரவில் உற்சவர் அம்மன் அலங்கார சப்பரத்தில் வீதி உலா வந்தார். பக்தர்களால் பூச்சொரிதல் விழா நடந்தது.

 

Tags : Sayalgudi ,Panguni Pongal festival ,Kitathirukkai Muthumariamman Temple ,Mudukulathur ,Ganapati Homam ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...